தமிழர்தம் நாகரிகம் எவ்வளவு மேன்மையுற்று இருந்தது என்பதை ஆன்மீக இலக்கியங்களை எந்த விருப்புவெறுப்பும் இல்லாமல் படித்தோமானால் தெரிந்து கொள்ளமுடியும்.சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சிறுத்தொண்டர் என்ற சிவபக்தர் கதை ஒன்று வருகிறது.அதில் ஒரு பாடல்.
பரிசு விளங்கப் பரிகலமும்
திருத்திப் பாவாடையில் ஏற்றித்
தெரியும் வண்ணம் செஞ்சாலிச்
செழும்போ னகமும் கறியமுதும்
வரிசை யினில்முன் படைத்தெடுத்து
மன்னும் பரிக லக்கால்மேல்
விரிவெண் துகிலின் மிசைவைக்க
விமலர் பார்த்துஅங்கு அருள்செய்வார்
பரிசு -இயல்பு, பரிகலம் - உண்கலம், பாவாடை - பரப்பிய ஆடை, சாலிச்செழும்போனகம் - சம்பா அரிசிச்சோறு, பரிகலக்கால் - முக்காலி போன்று அமைந்துள்ள உணவு வைத்து உண்ணும் ஆசனம்.
நல்லியல்பின் விளங்க உண்கலத்தை விளக்கி அதனை ஒரு பரப்பிய துணியின் மீது வைத்து அமுதவகைகள் நன்கு தெரியும்படி செழுமையான சாலிநெல்லரிசிச்சோறும் கறிவகைகளும் வரிசையாகப் படைத்துச் சிறப்பின்மிக்க அப்பரிகலத்தை நிலையான முக்காலியின் மீது வெண்துகில் பரப்பி அதன்மீது வைக்க ஆங்கு அடியவர் அவற்றைக்கண்டு உரைக்கலானார்.
சேக்கிழாரின் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது.அப்போதே டைனிங்டேபிளின் மேல் துணியை விரித்து உணவு பரிமாறும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதிலிருந்து தமிழர் நாகரீகம் எவ்வளவு செழுமையானது என்பதை அறியமுடிகிறது.
Saturday, September 6, 2008
தமிழர் நாகரிகச் செழுமை
Friday, September 5, 2008
கல்வெட்டுகள் - வரலாற்றின் படிக்கட்டுகள்
வரலாறு என்பது ஊகத்தின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல.அசைக்கமுடியாத அடிப்படை சான்றுகளை கொண்டு எழுதப்படுவது.அந்த அடிப்படை ஆதாரங்களே கல்வெட்டுகள்.
கி.பி.1000த்தில் தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன் என்பதை நாம் கல்வெட்டுகள் மூலமாகத்தான் அறிந்தோம்.இதுபோல் தமிழகத்தில் பல்லாயிரம் ஊர்களின் வரலாற்றை கல்வெட்டுகள் வாயிலாகத்தான் அறிந்தோம்.
லண்டனில் நடைபெற்ற பத்தூர்கோவில் நடராஜர் சிலைவழக்கில் நீதிபதி , கல்வெட்டு நிபுணர் திரு.நாகசாமி அவர்களிடம் புத்தூர் கோவிலின் காலம் என்ன? தமிழ்நாட்டு சிலைகளின் காலத்தை எவ்வாறு கணிக்கிறீர்கள்? அவை உண்மையான சான்றுகள் என எவ்வாறு நிரூபிப்பீர்கள்? என கேள்வி கேட்டார்.
அப்போது பத்தூர் கோவிலின் கல்வெட்டுகளை எடுத்துக்கூறி சிலைகளின் காலத்தைக்கணிக்கும் கல்வெட்டுகளின் தன்மையையும் எடுத்துக்கூறினார்.அந்த சான்றுகளைப் பார்த்துவிட்டு நடராஜர் சிலை கோவிலுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என தீர்ப்புக்கூறினார்.
இப்போது படிக்க இருப்பவையே 40 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள்.ஆனால் தொல்லியல்துறையில் கல்வெட்டுநிபுணத்துவம் பெற்றவர்களோ நான்குபேர் மட்டும்தான்.
கடந்த 40 ஆண்டுகளில் திருப்பணிக்காக அழிக்கப்பட்ட கல்வெட்டுகளோ ஏராளம். இன்றைய தலைமுறைக்கு நமது கலை தெரியாது, கட்டிடம் தெரியாது,கல்வெட்டு தெரியாது,வரலாறு தெரியாது.இப்படியிருந்தால் தமிழின் தொன்மையை,தமிழகத்தின் சிறப்பை,கலை மற்றும் கலாச்சாரத்தை,நாகரீகத்தை,பண்பாட்டை உலகத்திற்கு நாம் எவ்வாறு தெரியப்படுத்துவோம்? என வினவுகிறார் கல்வெட்டுநிபுணர் டாக்டர் திரு.ஆர்.நாகசாமி.
Saturday, August 23, 2008
வெகுஜன ஊடகங்கள் மறந்த ஒரு மாமனிதர்
தமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.
பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்துவிட்டு விடுதலைப்போராட்டங்களில் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். திருமதி.N.C.வசந்த கோகிலம், திருமதி.டி.கே.பட்டம்மாள், திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி உட்பட பல பாடகர்களும் இவரது பாடல்களைப் பாடி பெருமைப்படுத்தினர்.
திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் ஐ.நா.சபைக் கச்சேரியில் இவரது ‘முருகா, முருகா’ பாடலும் இடம்பெற்றது.
இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:
1. இசைமணி மஞ்சரி (1970இல்)2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)3. கீர்த்தனை அமுதம் (1974இல்)4. நவமணி இசைமாலை (19880இல்).
தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்!
“தமிழ் கலைக் களஞ்சியம்” என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார்.
பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் ‘பாரதியின் நூல்கள் - ஒரு திறனாய்வு’ என்கிற தலைப்பில்!
பத்மபூஷன்,கலைமாமணி என பல கௌரவங்களை பெற்ற இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பிறந்த இவர் தமிழ் கலைக் களஞ்சியம் வெளிவர முக்கிய பங்காற்றியவர்.ஆனால் இவரது நூற்றாண்டை வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கு கொண்டுசெல்லாதது ஏன்? என்பதுதான் புரியவில்லை.
இவரது வாழ்க்கை குறிப்பு பற்றி மேலும் அறிய
http://entertainment.vsnl.com/thooran/Thooran_Biography.html
நன்றி.திரு.ஜீவா வெங்கட்ராமன் அவர்களுக்கு.
Friday, August 22, 2008
Monday, August 18, 2008
Sunday, August 17, 2008
Thursday, August 14, 2008
சுதந்திர தினம்
சுதந்திரதினம்-டிவி இல்லாமல்August 13, 2008 – 9:11 pm
நண்பர் கிருஷ்ணன் அனுப்பிய கடிதம் இது. வாசகர் கவனத்துக்காக.
இமையம் யூத் அஸோஷியேஷன் இணைந்த கரங்கள் நற்பணி இயக்கம் இளைய ஆணிகள் பசுமை பாரதம் 18-f, ECM lay out, SKC Road., Erode Ph. 9842771700, 9865916970. அன்புடையீர், நாங்கள் ஈரோட்டை மையமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ சமூகப்பணி இயக்கங்கள். கடந்த நான்கு வருடங்களாக எங்கள் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற நாட்களில் தொலைக்காட்சிப்பெட்டிகளை அணைத்துவிடும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறோம். அதேபோல தொலைக்காட்சி நிறுவனங்களிடம் அந்த நாட்களிலாவது உணர்வுகளை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகளான திரைநட்சத்திர பேட்டிகள் திரை செய்திகள் போன்றவற்றை தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்து வருகிறோம். திரைநட்சத்திரங்கள் திரைப்பணியாளார்கள் போன்றோரிடமும் அந்நாட்களில் பேட்டிகள் கொடுப்பது போன்றவற்றை செய்யவேண்டாம் என்றுசொல்லிவருகிறோம்.
இந்த நாட்களிலாவது வெறும் பொழுதுபோக்கை தவிப்பது என்ற பொறுப்பு ஊடகங்களுக்கு தேவை என்பது எங்கள் எண்ணம். பொதுமக்களிடம் இருக்கும் இந்த மேலோட்டமான மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அந்நாட்களை வெறும் விடுமுறைநாட்களாக மட்டுமே காணும் மனநிலையாகும். இந்த நாட்டில் நடந்த விடுதலைப்போராட்ட வரலாற்றை இளையதலைமுறை முழுமையாகவே மறக்கும் நிலைக்கு நாட்டை இது கொண்டுசெல்லும்.
இதை உங்கள் இணையதளங்களில் பிரசுரியுங்கள். உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் இச்செய்தி கூடுமானவரை அதிக மக்களிடம் சென்று சேரட்டும். விடுதலைநாளை பயனுள்ள வழிகளில் செலவழிப்போம். அந்த நாளில் நம் தேசத்துக்காகவும் சமூகத்துக்காகவும் எதையாவது செய்வோம். குறைந்தது நாட்டைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்
அன்புடன்
கிருஷ்ணன்செயலாளர்இமையம்
பிறநிறுவனங்களுக்காகவும் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
கட்டுரை குறித்த கருத்துக்களை jeyamohan.writer@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
நன்றி திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.